1999 போல மீண்டும் பாஜக-திமுக கூட்டணியா? மத்திய அமைச்சராகிறாரா திருச்சி சிவா?
2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக-திமுக கூட்டணி, திருச்சி சிவாவின் மத்திய அமைச்சர் வாய்ப்பு, டெல்லி அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் ஆய்வு.
-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
2026 தேர்தல் முடிவு மாற்றிய அரசியல் கணக்கு
அரசியலில் எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். அடுத்து வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தற்போது பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கணிக்கிறார்கள்.
கடந்த மே மாதம் நான்காம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. அந்த முடிவுகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.
தமிழ்நாட்டில் அதிமுக அல்லது திமுக மட்டுமே ஆட்சியைப் பிடிக்கும் என்ற வழக்கமான எதிர்பார்ப்பை, கணக்கைத் தவிடு பொடியாக்கி 108 இடங்களில் வென்று தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது.
தமிழக வெற்றிக்கழகத்தின் எழுச்சி – திமுகவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
இது கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக ஆட்சி ஆண்ட இரண்டு கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிகமான பாதிப்பைத் திமுகவுக்கே ஏற்படுத்தியுள்ளது.
திமுக எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சட்டச் சவால்கள்
ஏற்கனவே திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைக் கண்காணிப்பிலும், விசாரணை வளையத்துக்குள்ளும் உள்ளனர்.
விஜய் அரசின் முதல் 75 நாட்கள்: புதிய நிர்வாக அணுகுமுறை
மறுபுறம் முதலமைச்சர் ஜோசப் விஜயைக் குறைத்து மதிப்பிட்ட திமுக இந்த 75 நாட்களில் அவரின் செயல்பாடுகளைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறது. இதற்குக் காரணம் விஜய் அரசின் மூன்று விதமான செயல் திட்ட வடிவங்கள்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஒன்று, வடசென்னையை முற்றிலும் மாறுபட்ட அடையாளமாக மாற்றி தமிழகத்தின் ஆச்சரியச் சின்னமாக மாற்றுவது. இரண்டாவது, குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் துறைகளில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி நகரத்தை மாற்றி அமைப்பது. மூன்றாவது சாலை வசதிகளை மேம்படுத்துவது...இந்த முப்பெரும் பணிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே முடிக்கப்பட்டு புதிய ஆட்சியின் அடையாளமாக இவை திகழவேண்டும் என்பதே ஆளும் கட்சியின் தற்போதய முதன்மை இலக்கு.
திமுகவின் பார்வை ஏன் டெல்லியை நோக்கித் திரும்புகிறது?
இதை மோப்பம் பிடித்துத் தெரிந்து கொண்ட திமுக தமிழ்நாட்டில், இனி பருப்பு வேகாது என்பதைப் புரிந்து கொண்டு டெல்லியை நோக்கி பயணிக்க முடிவு செய்துவிட்டதாக அக்கட்சியிலிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியும் அதிகாரமும் இரண்டு கண்கள் என பாவித்து அதையே கொண்ட கொள்கையாகச் செயல்படும் திமுக, ஆட்சி அதிகாரத்திற்காக டெல்லியை நோக்கிப் பயணிப்பதாக அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மாறும் திமுகவின் அரசியல் நகர்வுகள்
அதன் முதல் கட்டமாக நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அருகே அமரக்கூடாது என்ற முடிவு எடுத்து அவைத் தலைவருக்குக் கடிதம் கொடுத்து, இருக்கைகளை மாற்றி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை விட்டு விலகி அமர்வது எனும் நகர்வை நகர்த்தி இருக்கிறது.
காங்கிரசிலிருந்து விலகும் சைகையா?
அதேபோல NEET எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த அடையாளப் போராட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் திமுகவினர் காங்கிரசைக் கடுமையாக சாடி வருகின்றனர்.
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு மசாதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
திமுகவில் தற்போது 22 எம்பிக்கள் உள்ளனர் தோழமைக் கட்சிகள் திமுகவை விட்டு விலகிச் சென்ற இந்த தருணத்தில் இந்த மசோதாக்களை ஆதரிக்க திமுக முடிவு செய்து விட்டதாக அக்கட்சியின் மேல் மட்டத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ, விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி ஆறு மாதத்தில் அகற்றப்படும் என்றும் இன்னும் சில மாதங்களில் திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என்றும் கூறி வந்தார்.
இதனை, அறிவாலயம் மறுத்துப் பேசவில்லை. இந்நிலையில் விஜய் அரசு கலைக்கப்படாது என்பது உறுதியாகப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆகிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.
அதன்படி தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்கும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் பொழுது பாஜகவுக்கு ஆதரித்து வாக்களிக்கும் என்றும் ஒருவேளை அது நடக்காவிட்டால் வெளிநடப்பு செய்து தங்களது ஆதரவை திமுக தெரிவிக்கும் என்றும் டெல்லித் தகவல்கள் கூறுகின்றன.
1999 கூட்டணியின் அரசியல் வரலாறு மீண்டும் திரும்புகிறதா?
1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பிடித்தது.
குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் "ரைட் மேன் ராங் பார்ட்டி" என்று விமர்சித்துத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து திமுக அதிகார சுகத்தை அனுபவித்தது.
2029-ஐ நோக்கிய திமுகவின் புதிய வியூகம்?
இதன் அடிப்படையில் திமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் திருச்சி சிவா இடம்பிடிக்கிறார் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் திருச்சி சிவா அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்று ஆருடம் சொல்லப்பட்டு வந்த நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி சிவாவின் மத்திய அமைச்சர் கனவு இந்த முறை நிறைவேறும் என்கிறது டெல்லி அரசியல் தகவல்கள்.
தமிழ் ஊடகம் இணைய இதழை Subscribe செய்ய மேலே வலதுபுறம் உள்ள Subscribe பொத்தானை அழுத்துங்கள்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)