டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி: சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கடும் கண்டனம்
டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தர்மேந்திர பிரதானை நீக்கவும் வலியுறுத்தினர்.
சென்னை | ஜூலை 20, 2026
டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியின் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்துக்கு, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
சென்னையில் இன்று (20.07.2026) நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
டெல்லி சம்பவத்திற்கு கண்டனம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி நடத்தியது ஜனநாயக விரோதமான அடக்குமுறை நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வு தொடர்பான குளறுபடிகள் மற்றும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகம் முழுவதும் பேரணி
தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து, செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களை பங்கேற்கச் செய்து மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு
நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4-ல் மாற்று அரசியல் பிரகடனம்
தமிழகத்தின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பிரச்சினைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இடதுசாரி கட்சிகளின் கூட்டுப் பிரகடனம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் விவகாரம்
அயோத்தி ராமர் கோவிலின் உண்டியல் வருவாயில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ் ஊடகம் குறிப்பு :
இந்த அறிக்கை சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் அந்தக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளாகும்.
தமிழ் ஊடகம் டாட் காம் இணைய இதழை Subscribe செய்யுங்கள். Subscribe பொத்தான் மேலே வலதுபுறம் உள்ளது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)