சட்டமன்றத்திற்குள் சீமான் குரல் ஒலித்தால் "அவை" அலறுமா? நடைமுறை என்ன?
சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசும் நடைமுறை என்ன? சீமான் MLA ஆனால் என்ன செய்ய முடியும்? சட்டப்பேரவை விதிமுறைகள் மற்றும் அரசியல் யதார்த்தத்தை அலசும் சிறப்புக் கட்டுரை.
நாம் தமிழர் நிர்வாகிகளின் தவறான பரப்புரை !
சீமான் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். ஒலித்தால் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என எல்லோரும் ஓடுவார்கள், அலறுவார்கள் என்றெல்லாம் சில சமூக ஊடக, காட்சி ஊடகப் பதிவுகளைக் காண முடிகிறது. உண்மையில் அது சாத்தியமா ?
சட்டப்பேரவை என்பது சட்டங்களைத் திருத்தும், உருவாக்கும் அவை. அங்கே மேடையில் பேசுவது போல எல்லாம் பேச முடியாது. அவைத் தலைவர் அனுமதியின் பேரில் மட்டுமே பேச முடியும்.
கேள்வி பதில்
ஒரு உறுப்பினர் கேட்க விரும்பும் கேள்வியைக்கூட முதல் நாளே அதைத் தலைவரிடம் எழுதிக் கொடுத்து விட வேண்டும். அதை அவைத்தலைவர் அனுமதிக்கலாம் என்று எண்ணினால் அந்தக் கேள்வி தொடர்பான அமைச்சருக்கு அதனை அனுப்பி வைப்பார்.
ஏற்கனேவே எழுதிக் கொடுத்த கேள்வியை உறுப்பினர் அவையில் கேட்க அதற்கு அமைச்சர் பதில் அளிப்பார்.
"0" நேரம், எனும் நேரத்தில் மட்டுமே எந்த உறுப்பினரும் ஒரு பிரச்னையை கிளப்ப முடியும்.
எனினும், அதற்கும் அவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட அவைத் தலைவர் அனுமதி அளிக்கும் சொற்கள், செயல்கள், சைகைகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெறும்.
மேடைகளில் பேசுவது போல அவையில் பேச முடியாது.
233 உறுப்பினர்களும் எழுந்து நின்றாலும் கூட, அவைத் தலைவர் தமது இருக்கையை விட்டு எழுந்து நின்றால் முதலமைச்சர் உள்பட 233 உறுப்பினர்களும் உடனே அமர்ந்தாக வேண்டும்.
எனவே, சீமான் மட்டுமல்ல நாம் தமிழரின் வேட்பாளர்கள் 140 பேராவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம்.
அதே வேளை நடைமுறை என்ன என்று அறிந்து அதன்படி பரப்புரை மேற்கொள்ளவேண்டும் அறிவாயுதம் ஏந்தும் நாம் தமிழர் கட்சியினர்.
15 ஆண்டுகள் ஆன ஒரு கட்சி எல்லா இடங்களிலும் நடைமுறை சாத்தியம் அறிந்து அரசியல் செய்ய வேண்டும்.
வேல்முருகன் என்ற ஒற்றை சட்டமன்ற உறுப்பினரால் அவைக்குள் என்ன செய்ய முடிந்தது என்பதைக் கவனித்தால் உண்மை புரியும்.
உண்மையில் சீமான் பொது மேடைகளில் பேசிய பேச்சுக்கள்தான் உலகெங்கிலும் சென்று சேர்ந்திருக்கிறது. சட்டமன்றத்தினுள் வரம்புக்குள் குறிப்பிட்ட சில நிமிடங்கள் பேசுவதற்கும், மேடைகளில் மணிக்கணக்கில் விரிவாக்கப் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது இல்லையா.
மக்களுக்கான போராட்டக் களத்தில் ஒலிக்கும் சீமானின் குரல்தான் வீரியம் மிக்கது.
What's Your Reaction?
Like
4
Dislike
0
Love
2
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)