ஆளுநர் பதவியை நீக்கு ; இந்தியாவை தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று | பெ.மணியரசன்

ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் தங்கள் சுரண்டலுக்காக - அரசு ஆதிக்கத்திற்காக குருதி வெள்ளத்தில் உருவாக்கிக் கொண்ட "செயற்கை நாடு தான் இந்தியா!" அந்த இந்தியாவிற்குள் தமிழ்நாடும் பலியாக்கப்பட்டது : ஐயா பெ.மணியரசனின் சிறப்புக் கட்டுரை

Jul 03, 2026 - 17:53
Updated: 3 days ago
0 27
ஆளுநர் பதவியை நீக்கு ; இந்தியாவை தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று | பெ.மணியரசன்

-பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சிறப்புக் கட்டுரை

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி; பிரிட்டன் மக்கள் தொகை 6.99 கோடி; பிரான்சு மக்கள் தொகை 6.91 கோடி; செர்மன் மக்கள் தொகை 8.35 கோடி !

ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலகில் நூற்றுக்கும் மேல் உள்ளன. நார்வே மக்கள் தொகை 56,33,770; டென்மார்க் மக்கள் தொகை 60,23,520. இவ்வாறு பல நாடுகள் ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்டுள்ளன.

தமிழீழத்தில் நம் இனத் தமிழர்களை இலட்சக் கணக்கில் குவியல் குவியலாகக் கொன்றழித்த சிங்களர்களின் மக்கள் தொகை இலங்கையில் இரண்டு கோடிக்குக் கீழ் தான் !

ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி !

தமிழ்நாடு, மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைப்போல் தனி அரசு அமைக்காமல், இந்தியாவுக்குள் ஒரு சிறுபான்மை இன மாநிலமாகச் சுருங்கியது ஏன் ?

அந்தத் துயரங்களையும் சுருக்கமாக நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

ஐரோப்பியர்கள், வணிக வேட்டைக்காக உலகெங்கும் கடல் வழியாக அலைந்தனர். அந்த வணிக வேட்டைக்காக முதல் முதலாக கேரளத்தில் உள்ள கோழிக்கோடு துறைமுகத்தில் 1498 ஆம் ஆண்டு வந்து இறங்கிய நபர்தான் வாஸ்கோடகாமா. "அவரும் அவருடன் வந்தவர்களும் போர்ச்சுகலுக்குத் திரும்பும்போது இங்கிருந்து கொண்டு சென்ற சமையல் மற்றும் வாசனை நுகர்வுப் பொருட்கள், வந்த பயணச் செலவைவிட 60 மடங்கு அதிக இலாபம் தந்தன" என்கின்றன வரலாற்று நூல்கள் !

கோவா, டையூ, டாமன் ஆகிய மூன்று பகுதிகளிலும் தங்கள் ஆட்சியை வைத்திருந்த போர்ச்சுகீசியர் 1947க்குப் பிறகும் அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்தனர். கடைசியாக 1961 ஆம் ஆண்டுதான் அம்மூன்று பகுதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது போர்ச்சுகல்.

ஆசியா கண்டத்தில் தனது காலனிகளை நிறுவுவதற்காக நெதர்லாந்து அரசின் ஆதரவுடன் நிறுவப்பட்ட பன்னாட்டு வணிகவேட்டை நிறுவனத்தின் பெயர் "டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி". டச்சு மொழியில் "Vereenigde Oostivdiche Compagnie" என்பதுதான் ஆங்கிலத்தில் 'East India Company" - தமிழில் "கிழக்கிந்தியக் கம்பெனி!"

இப்போது புரிகிறதா, "இந்தியா" என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று ?  ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் சூட்டிய பெயர்தான் இந்தியா !

"இந்தியா" என்ற பெயரில் நாடோ, இனமோ வரலாற்றில் இருந்ததில்லை.

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) என்பது இங்கிலாந்து இராணி எலிசபெத்தால் ஏற்பிசைவு வழங்கப்பட்டு, கி.பி. 1600 டிசம்பர் 31 இல் இலண்டனில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு வணிக வேட்டை நிறுவனம் ஆகும் !

பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி (French East India Company) 1664 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அனுமதியுடன் 1668 ஆம் ஆண்டு பிரெஞ்சு வணிக வேட்டையாடிகள் சூரத்தில் தங்களின் முதல் தொழிற்சாலையைத் தொடங்கினர்.

தமிழர்களின் புதுச்சேரியை, பிரெஞ்சுக்காரர்கள் நம்மிடம் 1947 ஆகத்துக்குப் பின்னும் ஒப்படைக்க மறுத்தனர். புதுவைத் தமிழர்களின் போராட்டங்களே, 1962 ஆகத்து 16 அன்று புதுச்சேரியை விடுவித்து இந்தியாவிடம் இணைத்தது.

ஐரோப்பாவில் இருந்து வந்தேறிய இந்த வணிக வேட்டையாடிகளுக்கு இடையே, இந்திய மண்டலத்தைக் கைப்பற்ற போட்டியும் - போர்களும் நடந்தன. பெரும்பகுதி ஆங்கிலேயர் கையிலும்; புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் கையிலும்; கோவா, டையூ, டாமன் போர்ச்சுகீசியர் கையிலும் மிஞ்சின !

1947 ஆகத்து 15 விடுதலை, இந்தியாவின் அனைத்து இனத் தாயகங்களுக்கும் கிடைத்த விடுதலையா? இந்தி - குசராத்தி மண்டலத்திற்கு மட்டும் கிடைத்த விடுதலையா ?

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தனி தாய்மொழி கொண்டு, தனித்தனி இனங்கள், தனித்தனி தாயகங்களில் வாழ்ந்து வந்தனர். 

"பதினைந்தாயிரம் (15,000) ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் பல நின்றுள்ளன. வெளிநாட்டுக் கடல் வணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்று திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோம. இராமசாமி குழு கண்டறிந்துள்ளது. ஆங்கிலேயக் கடலியல் ஆய்வாளர் திரு. கிரகாம் ஆன்காக், "11,500 ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் கடலில் பெரிய துறைமுகம் இருந்துள்ளது. ஒரே நேரத்தில் 70 கப்பல்கள் நின்றுள்ளன. கடல் கடந்து வாணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்கிறார்.

ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் தங்கள் சுரண்டலுக்காக - அரசு ஆதிக்கத்திற்காக குருதி வெள்ளத்தில் உருவாக்கிக் கொண்ட "செயற்கை நாடு தான் இந்தியா!" அந்த இந்தியாவிற்குள் தமிழ்நாடும் பலியாக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் (1947 க்குப் பின்) ஐரோப்பிய வேட்டையாடிகளான வெள்ளையர்கள் கொடுத்திருந்த மாநில உரிமைகளைக் கூட விடுதலை பெற்ற இந்திய அரசு தொடர்ந்து பறித்து வருவது ஏன்?

வெள்ளையன் ஆட்சியில், விற்பனை வரி வசூல் உரிமை மாநில அரசுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சியில் கல்வி, மருத்துவம், காவல்துறை மூன்றும் மாநில அதிகாரத்தில் இருந்தன. இவற்றைப் பறித்து, புது தில்லி - மைய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு சென்று விட்டார்கள் !

உலகக் கூட்டாட்சி நாடுகள் (Federal States) எதிலும் இல்லாத, மைய (இந்திய) அரசின் ஆதிக்கத்தின் கீழ் மாநில - மைய அரசுகளின் பொதுப் பட்டியல் (Concurrent List) என்ற புதுவகை மாநில ஆக்கிரமிப்புப் பட்டியலை உருவாக்கி உள்ளார்கள். இதன்கீழ் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகள் (Bills), இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டால் தான் சட்டமாகும்.

உலகத்திலுள்ள கூட்டாட்சி நாடுகளான அமெரிக்கா (U.S.A.) , கனடா, சுவிட்சர்லாந்து, செர்மனி எதிலும் இல்லாத நியமிக்கப்படும் மாநில ஆளுநர் பதவி இந்தியாவில் ஏன் ?

"மாநில சட்டமன்றங்களை ஆளுநரின் கையடக்க அமைப்பாக - அவர் நினைத்தால் ஆட்சியைக் கலைக்கலாம்" என்று சர்வாதிகாரம் கொடுத்திருப்பது ஏன்?

இத்துடன் இன்னொரு பேரபாயம் தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டுகிறது. அன்றாடம் வெள்ளம்போல் இந்திக்காரர்களும் மற்ற மாநிலத்தாரும் தமிழ்நாட்டில் வந்து குவிந்து, இங்கேயே தங்கி விடுகின்றனர். 'தமிழ்நாடு', 'இன்னொரு இந்தி மாநிலம்' ஆகிவிடுமோ என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது.

இவை ஞாயமா? நீதியா? இந்திய விடுதலைக்காக உயிர்நீத்த, தூக்கில் தொங்கிய, சிறையில் செக்கிழுத்த, அந்தமான் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழர்கள் - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக இந்திக்காரர் ஏகாதிபத்தியம் கேட்டா ஈகம் செய்தார்கள்?

"இந்தியா ஓர் உண்மையான கூட்டரசாக அமையும். அப்படிப்பட்ட புதிய இந்தியாவில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வார்கள்! தேசிய இனத் தாயகங்கள் விரும்பி சேர்ந்துள்ள ஒரு கூட்டரசாக இந்திய அரசு செயல்படும்" என்ற நம்பிக்கையில் தானே அயல் இன ஆங்கிலேயரை விரட்ட போராடினார்கள் - ஈகம் செய்தார்கள் தமிழர்கள் !

அவர்களின் வாரிசுகளாகிய இக்காலத் தமிழர்கள், இந்திய அரசிடம் பின்வரும் இலட்சியக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம் !

இந்திய அரசே! 

1. மாநில ஆளுநர் பதவியை நீக்கு!

2. மாநில ஆட்சியைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐ நீக்கு!

3. படைத்துறை, இந்தியப் பாதுகாப்பு, பண அச்சடிப்பு, வெளிநாட்டு உறவு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் இருக்க வேண்டும். எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!

4. வரி வசூல் அனைத்தும் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். மாநிலங்கள் வசூலித்த வரியில் குறிப்பிட்ட விகிதம் மைய ஆட்சிக்கு வழங்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட வேண்டும்!

5. இந்தியாவை இறையாண்மை உள்ள தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!

6. வட மாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வந்து குவிந்து தமிழர் தாயகத்தை கலப்பின மாநிலமாக்கும் அபாயத்தைத் தடுக்க நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளுக்கு இருக்கும் வெளியார் உள் நுழைவு அனுமதி (Inner Line Permit) அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும்.

7. இந்தியக் கூட்டரசு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், மக்கள் தொகை விகிதம் பார்க்காமல், சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

8. மேற்கண்ட புதிய முன்மொழிவுகளை முன்வைத்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க, புதிய அரசமைப்பு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் எல்லா மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் அரசியல் மற்றும் ஆய்வுத் துறை சார்ந்தோர் இடம்பெற வேண்டும்.

9. தமிழினத் தற்சார்பு, தாயகக் காப்பு, தாய்மொழிக் காப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உரையாடி - ஏற்று - செயல்பட வேண்டும்.

 பரப்புரை - மக்கள்திரள் இயக்கம்

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு தழுவிய விரிவான பரப்புரையும் மக்கள்திரள் இயக்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User