இன்றைய இந்தியாவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதம் அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்
தனித் தமிழ்நாடு கோரிக்கையை இன்றைய இந்தியாவில் தேசவிரோதமாகக் கருத முடியாது; அதனை முன்வைப்பவர்கள் மனநலப் பிரச்சனையுடன் இருப்பவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
கலகம் பதிப்பகம் சார்பில் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் "தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்" என்ற தலைப்பில் சென்னையில் புத்தகம் வெளியிடப்பட்டது.
அந்தப் புத்தகத்தில், "தமிழ்நாடு தனி நாடாக இருக்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் இதற்காகக் "கரிலாப்" போர் முறையைப் பின்பற்றலாம்" எனவும் 1967ம் ஆண்டு தமிழரசன் பேசியது இடம் பெற்றிருந்தது.
இந்தக் காரணத்திற்காக, புத்தகத்தை வெளியிட்ட கீரா மூர்த்தி மற்றும் தமிழ் பாலா ஆகியோர் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 1967ம் ஆண்டு அன்றைய சூழலில் தமிழரசன் பேசியது வெறுப்பு பேச்சாக இருக்கலாம். இன்றைய இந்தியா இதயங்களாலும், ஆன்மாவினாலும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தனித் தமிழ்நாடு கோரிக்கையை தேசத் துரோகமாக பார்க்க முடியாது; மாறாக இந்த கோரிக்கையை முன்வைப்பவர்களை மன நல பிரச்சனை உள்ளவர்களாகவே பார்க்கப்படுவர் என்று தெரிவித்து, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்வது வெறுப்பை விதைப்பது ஆகாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இருவருக்கும் எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)