பத்திரிகை ஊடகத் துறையில் "கரை" வேட்டி கட்டாத திமுகவினரின் ஆடக்கூடாத ஆட்டங்கள் !

திமுக ஆதரவாளர்கள் ஊடகத் துறையில் பெற்ற அரசியல் செல்வாக்கை விமர்சிக்கும் கட்டுரை.

Jun 23, 2026 - 14:04
Updated: 10 days ago
0 4
பத்திரிகை ஊடகத் துறையில் "கரை" வேட்டி கட்டாத திமுகவினரின் ஆடக்கூடாத ஆட்டங்கள் !

-சிறப்புப் புலனாய்வுச் செய்தியாளர் குழுவினர்

நான் திமுகவின் "சொம்பு" அல்ல, திமுகவின் "அண்டா" என்று பகிரங்கமாகத் தம்மை திமுக மேடையில் அறிவித்துக்கொண்ட செந்தில்வேல் என்பவருக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் கலைவாணர் அரங்கில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இரண்டாவது மாடியில் ஒரு அலுவலக அறை, இரண்டு அலுவலக உதவியாளர்கள், தட்டச்சு செய்பவர்கள், பாதுகாவலர்கள், ஒரு அரசு இன்னோவா கார், மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் அரசு ஊதியம்.

அப்படி என்ன பதவி ? அது அவருக்கென்றே உருவாக்கப்பட்ட "media adviser" - ஊடக அறிவுரையாளர் பதவி. அப்படி என்ன அவர் ஊடகங்களுக்கு அறிவுரை சொல்லத் தெரிந்தவர் என்று நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. அண்டாவுக்கு எப்படி ஈயம் பூச வேண்டும் என்று ஒரு அண்டாவிடம் கேட்பது போன்று அபத்தமானது அது.

இப்படி ஒரு அரசு பதவி உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் அவர் பணியாற்றியதே தமிழ்நாட்டின் பெரும்பாலான பத்திரிகை ஊடகத்தினருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஒரு அரசுப் பணியில் இருந்து கொண்டே இந்த "அண்டா" எப்படி ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் சென்று அமர்ந்து கொண்டு திமுகவுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தார், திமுக கட்சி மேடைகளில் பரப்புரை செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. எவன் கேட்கப்போகிறான்… கேட்டால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே.

அதேபோல இந்த ஆபாச அருவருப்பு ஊடகம் நடத்திக் கொண்டிருந்த முக்தார் என்பவருக்கும் இரண்டு காவல்துறைக் காவலர்கள் பாதுகாப்புக்காக உடன் சென்று கொண்டிருந்தனர். அரசு சார்பில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அநேகமாக அவருக்கும் ஏதோ ஒரு "ஆபாச ஊடக அறிவுரையாளர்" - "Awkward media adviser" என்ற ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டு அரசு பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்,யாருக்குத் தெரியும் ?!

அடுத்ததாக, திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை மட்டும் "Fact Check" எனும் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிக்கும் ஐயன் கார்த்திகேயன் என்பவருக்கென்று ஒரு தனித் துறையை ஆரம்பித்து அங்கு அவருக்கு அரசு வேலை. ஒரு தனி அலுவலகம், அலுவலக உதவியாளர்கள், வாகனம், பாதுகாப்பு, ஊதியம் என தனி ஏற்பாடு.

அதேபோல, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மன்ற விதிகளுக்கு (பை-லா) எதிராக, உறுப்பினராக ஆகத் தகுதி இல்லாத சுமார் 800 பேரை உறுப்பினர்களாகச் சேர்த்து தேர்தல் எனும் பெயரில் அந்த மன்றத்தை திமுக ஆதரவாளர்களிடம் கைப்பற்றிக் கொடுத்த ஹிந்து என்.ராம் தலைமையில் செயல்பட்ட 12 பேர் குழுவில் இருந்த அந்த இதழின் டி.சுரேஷ் குமார் (DSK) என்பவருக்கு அரசின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழுவில் (Media Accreditation Committee) அரசுப் பணி.

இது எல்லாவற்றையும் விட CIJஎன்று சுருக்கமாக அழைக்கப்படும் Chennai Institute of Journalism எனும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் (திமுக) அரசு சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு நிறுவனம். பத்திரிகை ஊடகப் பயிற்சிக்காக ஒரு அரசு நிறுவனம் தொடங்கப்படுவது வெளிப்படையாகப் பார்த்தால் நன்மை போலத் தெரிந்தாலும், இங்கு பயிலும் மாணவ மாணவிகள் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் கற்றுகொடுக்கப் படுவார்களா என்கிற அடிப்படைக் கேள்வி ஒன்று இருக்கிறது இல்லையா. இந்த நிறுவனத்தில் நடந்த கூத்துகளைப் பார்த்து விடுவோம்.

இந்த நிறுவனத்தின் chairman யார் தெரியுமா… ஹிந்து என்.ராமின் தம்பி என்.ரவி. இதில் என்ன தவறு… அவர் ஹிந்து நிறுவனத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்தானே எனும் கேள்வி எழலாம்.

ஆம், அவர் ஹிந்து குழுமத்தின் ஒரு அங்கத்தினர், மு.க.ஸ்டாலினின் "வாக்கிங் நண்பர்" ஹிந்து என்.ராம்-ன் தம்பிதான்.

கேள்விக்கு பதில் சொல்கிறோம் இருங்கள்.

அடுத்து, இந்த நிறுவனத்தின் Director General (எதே Police DGP யா என்று கேட்டுவிடாதீர்… இது பத்திரிகை ஊடக நிறுவனத்தின் DG.). இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பவர் A.S.பன்னீர் செல்வன். இவரும் தி ஹிந்து இதழ் நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர், அங்கு பணியாற்றியவர்.

சரி… ஏ.எஸ். பன்னீர்செல்வன் "டைரக்டர் ஜெனரல்" என்றால் டைரக்டர்கள் இருக்க வேண்டுமே…?!

இருக்காதா பின்னே,

அதற்குதான் இருக்கிறார்களே குணசேகரன், கார்த்திகை செல்வன் போன்ற திமுகவை எந்த ஒரு தொலைக்காட்சி வாதத்தில்கூட விட்டுக்கொடுக்காத ஊடக மேக் அப் முகங்கள்.

தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் தரப்பட்டு நடத்தப்படும் இந்த நிறுவனத்தில், தலைவர் என்.ரவி தொடங்கி கடைநிலைப் பயிற்சியாளர் வரை அனைவரும் வெளிப்படையாகத் திமுக ஆதரவாளர்கள். மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கத்தில் இருப்பவர்கள்.

இதையெல்லாம் விட "தி ஹிந்து நிறுவனம்", ACJ - Asian School of Journalism என்கிற ஒரு தனியார் பத்திரிகை ஊடக பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறது. அப்படி இருக்கும்போது அந்த நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான என்.ரவி மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஏ.எஸ்.பன்னீர் செல்வன் உள்ளிட்டவர்களை அரசு நிறுவனத்தில் அமர்த்தினால் அது Conflict of Interest ஆகாதா ?!

மேலும், இந்த நிறுவனத்தில் முதல் கட்டமாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் பேசியபோது "நான் அடிப்படையில் திமுககாரன்" என்றே அறிமுகம் செய்து கொண்டு பேசினார்கள். அதாவது, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் இந்த அரசு நிறுவனத்தில் மாணவர்களைச் சேர்க்கும்போது அவர்கள் திமுக ஆதரவாளர்களா என்று பார்த்துப் பார்த்து சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களின் பின்புலம் அறிய காவல்துறையினரை வைத்து அறிக்கை வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொதுவாக செய்தி பத்திரிகை ஊடக நிறுவனங்களில் பணிக்கு சேர்க்கும்போது அவர்கள் மீது ஏதும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்று சரி பார்ப்பது வழக்கம். ஆனால், அவர்கள் உண்மையில் திமுகவினரா என்று சரிபார்த்து, எந்தவிதக் காரணம் கொண்டும் வேறு யாரும் சேர்ந்துவிடக்கூடாது என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்து சேர்த்திருக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு பத்திரிகை ஊடக பயிற்சி நிறுவனத்தில் ஒரு கட்சிகாரர்கள் மட்டும் பத்திரிகை ஊடகக் கல்வி பயின்றால் விளங்குமா அந்த நாடு ?! எப்படி அவர்கள் கட்சி சாராத சுயாதீன செய்தியாளர்களாகச் சுதந்திரமாக செயல்படுவார்கள் ?!

எதிர்க்கட்சியே இல்லாத இந்தியா என்கிற பாஜகவின் கொள்கைபோல, "திமுகவை மட்டுமே பாராட்ட, புகழப் பத்திரிகை ஊடகர்கள் இருக்க வேண்டும் - திமுகவை விமர்சிக்கும் எதிர்க் கருத்துக் கொண்ட பத்திரிகை ஊடகர்கள் தமிழ்நாட்டில் உருவாகவே கூடாது" என்கிற பாசிசம் இல்லையா இது ?!

மாணவ மாணவிகள் மட்டுமல்ல இந்த நிறுவனத்துக்குக் கவுரவ விரிவுரையாளர்கள், பயிற்சியாளர்களாகவும் திமுக ஆதரவாளர்கள்தான் வரவழைக்கப்படுகிறார்கள்.

ஆக, மக்கள் வரிப்பணத்தில் - அரசு நிறுவனத்தில் திமுக ஐடி விங் ஆட்களை உருவாக்கவா இந்த நிறுவனம் என்கிற கேள்வி எழுகிறதா இல்லையா ?

உலகின் கொடுங்கோன்மை ஆட்சி கொண்ட நாடுகளில் கூட செய்திப் பத்திரிகை - ஊடகப் பயிற்சிக் கல்லூரிகளைப் பெரும்பாலும் அரசாங்கங்கள் நடத்துவதில்லை… ஆனால் குடியரசு, சனநாயக ஆட்சி நடைபெறும் இந்தியாவில், அதிலும் தமிழ் நாட்டில், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், ஒரு கட்சி சார்ந்த (அரசு) பயிற்சி நிறுவனம் எந்த லட்சணத்தில் நேர்மையான சுதந்திரமான சிந்தனை கொண்ட பத்திரிகை ஊடகவியலாளர்களை உருவாக்கும் ?!

மு.க.ஸ்டாலின் ஆட்சி முடிந்து ஜோசப் விஜய் ஆட்சி வந்தவுடன் நாம் மேற்குறிப்பிட்டவர்களில் சிலர் தங்களின் அரசு பதவிகளில் இருந்து கடிதம் கொடுத்து விலகி விட்டனர். ஆனால் என்.ரவி, ஏ.எஸ்.பன்னீர் செல்வன், கார்த்திகை செல்வன் உள்ளிட்ட சிலர் இன்னமும் விடாப்பிடியாக அமர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதில் ஏ.எஸ். பன்னீர் செல்வத்துக்கு வீட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவலகம் வர அரசு கார். பிறகு மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துவர அதே அரசு கார். பிறகு மாலையில் வீட்டுக்கு செல்ல அதே கார்….

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்தத் திமுக ஆதரவுப் பத்திரிகை ஊடகர்கள் "பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டது போல" ஆடக் கூடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ் நாடு அரசாங்கத்தைத் தங்கள் திமுக கட்சி அலுவலகம் போல நடத்தி இருக்கிறார்கள் இவர்கள்.

இது எல்லாவற்றையும்விட ஹை லைட்… இந்த அரசு பயிற்சிப் பள்ளியில் பயின்று ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலினை வந்து சந்தித்து ஆசி பெற்றனர்.

திமுக ஆட்சி மீண்டும் வந்திருந்தால்… தமிழ்நாட்டை எவராலும் காப்பாற்றி இருக்க முடியாது என்பதுமட்டும் உண்மை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User