பிரான்சில் இளையராஜா நிகழ்ச்சி இரத்து: தமிழர்களின் எதிர்ப்பா? வெயில் காரணமா?
தமிழர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரான்ஸ் பாரிஸ் இளையராஜா இசை நிகழ்ச்சி இரத்து. ஏற்பாட்டாளர்கள் வெயில் மற்றும் அரங்கு வசதியின்மையே காரணம் என விளக்கம்.

தமது 50 -ம் ஆண்டுப் பொன் விழாவையொட்டி இளையராஜா ஆஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இசைச் சுற்றுலா தொடங்கியிருக்கிறார்.
அவரது சுற்றுப் பயணப் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் ஜூலை 4 ம் தேதியன்றும், ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் செப்டம்பர் 26 ம் தேதியும் நிகழ்ச்சி நடைபெறுவதாகத் திட்டமிடப்படிருந்தது.
ஜூலை 5 ம் தேதி என்பது கரும்பு*லிகளின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில்தான் மில்லர் என்பவர் முதன் முதலில் தனது இன்னுயிரை இழந்த நாள்.
அந்த நாளையொட்டிய ஒரு வார காலத்தை நினைவு வாரமாக உலகெங்கிலும் தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.
அந்த நாளுக்கு முந்தைய சனிக்கிழமை இரவு இளையராஜா நிகழ்ச்சி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதேபோல ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறவிருக்கும் செப்டெம்பர் 26 ம் தேதி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய திலீபன் உயிர் துறந்த நாள்.
இந்த இரண்டு நாட்களையும் இளையராஜா தவிர்க்க வேண்டும் என்று தமிழர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதிலும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "இளையராஜாவே திரும்பிப்போ" என்று பதாகைகள் கடைகளிலேயே வைக்கப்பட்டன. பிரான்சில் இயங்கி வரும் அனைத்துலக மனித உரிமைச் சங்கத்தின் தலைவர் கஜன் எனும் லோகநாதன் மருதையா இளையராஜாவுக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தார். தேதியை மாற்றாவிட்டால் நிகழ்ச்சி நாளன்று பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பாரிஸ் வாழ் தமிழர் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்துத் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டது. இத்தகைய நிலையில் அந்த நிகழ்ச்சி ஜூலை 12 ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக இளையராஜாவின் ஒரு புதிய பயணப் பட்டியல் தமிழ் ஊடகத்திற்குக் கிடைத்தது. அதனை மேற்கோள் காட்டி தேதி மாற்றம் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஆனால், பாரிஸ் நகர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல், நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தனர்.
இதனிடையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான Four Seasons Group UK அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பிரான்ஸ் நாட்டில் நிலவும் கடுமையான வெயில் காரணமாகவும், அதற்கேற்ப குளிர்சாதன வசதி கொண்ட அரங்கு இல்லாத காரணத்தாலும், இளையராஜாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும்" பாரிஸ் நகரின் ஜூலை 4 ம் தேதியன்று நிகழ்ச்சி நடைபெறாது" என்று அறிவித்துள்ளது.
பார்வையாளர்கள் செலுத்திய பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஏற்கனவே ஓரிரு முறை அறிவிக்கப்பட்டும் நடைபெறாமல் இருந்த இளையராஜா நிகழ்ச்சி இந்த மாதம் நடைபெற்றது. எனினும் அதற்குக் கூட்டம் மிகவும் குறைவான அளவில்தான் வந்துள்ளனர். அதேபோல ஜெர்மனியிலும் கூட்டம் குறைவாகவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்களின் மிக முக்கியமான நாட்களில் இது போன்ற இசை நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தி அம்மக்களின் போர் குறித்த நினைவுகளும், தியாகங்கள் குறித்த நினைவுகளும் அற்றுப்போக, மறக்கடிக்கப்படத் தொடர்ந்து சதி நடப்பதாகத் தமிழர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை, சுமார் 45 டிகிரி அளவுக்கு கடும் வெய்யில் நிலவும் பிரான்ஸ் நாட்டில் சுமார் 1500 பேர் இதுவரை வெய்யிலுக்குப் பலியாகியுள்ளனர்.
எனவே இதனையும் கவனத்தில்கொண்டு இளையராஜா நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)